“ராத்திரி பதினோரு மணி வரைக்கும் ஹிந்து ஆபிஸு
திறந்து இருக்கும். போனா ஆபிச்சுரி எடுத்துப்பாங்க”. பக்கத்து வீட்டு சன்முகம் வந்து
சொன்னபோது மலைப்பாக இருந்த்து. கிழக்கு தாம்பரத்திலிருந்து மௌண்ட் ரோடு வரை காரை
ஓட்டிக்கொண்டு போய் வர வேண்டும். அதுவரை தருமாவை யார் பார்த்துக்கொள்வது? மணி
பார்த்தேன் மாலை 7:30. மகேஷுக்கு போன் செய்து சொன்னேன். “அப்பா இன்னிக்கு சண்டே.
இங்க இப்பதான் விடிஞ்சுருக்கு. நான் ஃப்ளைட்டு பிடிக்க எப்படியும் இரண்டு
நாளாயிடும். என்ன செய்ய போறீங்க?” எனக்கு உதவிக்கு வருவான் என்று பார்த்தால் என்னிடமே கேள்வி கேட்கிறான்.
“சரிப்பா. உன்னால எப்ப வரமுடியுமோ வா. ஆனா அம்மாவ நான் வெச்சுக்க முடியாது. உங்க
ஊரு மாதிரி ஒரு வாரம் கழிச்சு ஃப்யுனரல் பன்ற வசதியெல்லாம் இங்க கெடயாது.” போனை வைத்துவிட்டேன். ஒரே பையன். அமெரிக்காவில்
வாசம். தாயின் மரணத்தின் போதும் வர முடியாத நிலமை. சரி. நான் தானே “நல்லா படி.
அமெரிக்கா போ”. என்று
அவனை விரட்டினேன்?
வாசலில் வந்து பார்த்தேன். 230 வீடுகள் கொண்ட
அடுக்குமாடி குடியிருப்பு. அவனவன் ஏழரை மணிக்குள் வந்து, “பாவம் நல்ல மாதிரி. நல்ல
ஆத்மா. அதான் யாருக்கும் ஒரு தொந்தரவும் குடுக்காம போயிட்டா. ச் ச் ச்”, என்று என் கையை பிடித்து ஆறுதல்
சொல்வதாக நிணைத்துக்கொண்டு பேசி சென்றுவிட்டார்கள். திங்கள் கிழமைகளில் துக்கம்
விசாரிக்க கூடாதாம். கடைசியாக வந்த சண்முகமும் எல்லா விவரமும் இங்க இருக்கு என்று
ஒரு சிறு காகிதத்தை டெலிபோனுக்கடியில் வைத்துவிட்டு சென்று விட்டார்.
இப்படி ஒரு ஞாயிற்று கிழமை மாலை இவள் இறந்து
போவாள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. 72 வயதில் அவளும் 83 மூன்று வயதில்
நானும் தனிக்குடித்தனம் பார்த்து வந்தோம். கடந்த 3 வருடங்களாக, வாரம் இருமுறை
டயாலிஸிஸ் செய்வதற்காக இவளை அழைத்துக்கொண்டு தேணாம்பேட்டை அப்பொல்லோ போய்
வந்துக்கொண்டிருந்தேன். இன்று ஏழு மணிக்கு அவளுக்கு பாலை குடுத்துவிட்டு ஹாலில்
டிவி பாக்க உட்கார்ந்த பொழுதுதான், வேலைக்காரி “அய்யா அம்மா பாலைக் குடிக்க
மாட்டேங்கறாங்க” என்று
குரல் குடுக்க, வழக்கம்போலவே எரிச்சலுடன் வந்து பார்த்தேன். கண்கள் சொருகி வாய்க்
கோணிக்கொண்டு தருமா படுத்திருந்தாள். தொட்டுப்பார்த்தால் உடல் சில்லிட்டு
போயிருந்தது. பயத்தில் ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்து விட்டு காத்திருந்தேன்.
அவர்கள் 15 நிமிடத்தில் வந்து அவள் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். அந்த 15
நிமிடங்களும் அவள் மரணத்தை ஆவலோடுதான் எதிர்பார்த்திருந்தேன். கடந்த சில மாதங்களாக
அவளைப் பார்த்துகொள்ள நான் பட்ட பாடு எந்க்குத்தானேத் தெரியும்? எங்கே அவர்கள்
வந்து தருமாவை ஆஸ்ப்பத்திரிக்கு அழைத்துப் போய் ஒரு வாரத்தில் தேற்றி கொண்டு வந்து
விடுவார்களோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை வந்தவுடனேயே தருமா இறந்து விட்டதை
உறுதிசெய்து விட்டார்கள்.
டெலிபோன் அடித்தது. வாத்தியார்தான். “சொல்லுங்கோ”, “கார்த்தால ஒன்பதரை மணிக்கு மேல
ஆரம்பிச்சுடலாம். நாளைக்கு நல்ல முஹூர்த்தம். நானும் ஒரு கல்யாணம்
ஒத்துண்டிருக்கேன். இங்க வந்துட்டு அங்கே போப்படாது பாருங்கோ? சரியா? மாமிய
தெற்குப் பாத்து படுக்க போடுங்கோ. ஃப்ரீஸர் எதுவும் வேண்டாம். ஏஸி இருந்தா போதும்.
பூமி சம்மந்தம் வேணும் இல்லையா. மகேஷ் வரானா?” பேசிக்கொண்டே போனார். “மகேஷ் வரலை”. “சரி பரவாயில்லை நீங்களே எல்லாத்தையும்
பண்ணிடலாம்”. போனை
வைத்தேன். யாரை கூப்பிட்டு தருமாவ தெற்க்குப் பக்கமாக திருப்புவது? எது தெற்கு? ஒரே
ஆளாக முடியுமா. ம்ஹூம். அசைக்க முடியாது என்று தோன்றியது. வேலக்காரி இல்லை. மணி
ஒன்பது.
வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். கீழே கார்
இருந்தது. போன முறை பி.பி. செக் செய்துவிட்டு டாக்டர் இனிமேல் கார் ஓட்ட வேண்டாம்
என்றார். அதானால் தருமாவை ஒரு ஆட்டோவில் தான் அழைத்துக்கொண்டு போய்வருவது வழக்கம்.
இப்போது மணியாகி விட்ட்து. இந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பது கடிணம். காரை ஸ்டார்ட்
செய்து வாசலுக்கு வந்தேன். செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறந்தான். நேபாளி.
இவனிடம் என்ன சொல்வது? அவன் சல்யூட்டை தாண்டிக் காரை ஓட்டி சென்றேன்.
1956ல் திருமணம். தருமா என்கின்ற தருமாம்பாள் 18
வயதில் எனக்கு வாக்கப்பட்டு வந்தாள். நல்ல விதமாக பி.யூ.சி முடித்தவளுக்கு கொஞ்ச
காலம் வரன் எதுவும் அமையவில்லை. அப்போதுதான் நான் அவள் பெற்றோர் கண்ணில் பட, அரசாங்க
உத்யோகஸ்த்தனான என்னை அவர்கள் தருமாவின் கையில் பிடித்துக்கொடுத்தார்கள். திருமணம்
முடிந்து ஒரு வாரத்தில் அம்மா குடித்தணம் அமைக்க வந்திருந்தாள். ஒரு ஞாயிற்று
கிழமை காலையில் தருமா கீரை மசியலும் ரசமும் செய்திருக்க, பசியுடன் இருந்த நான் அதை
இலையில் போட்டுக்கொண்டேன். நறநறவென பல்லில் மணல் தட்டுப்பட்டது. “தருமா”, ஓங்கி குரல் குடுக்க பதட்ட்த்துடன்
வந்தாள். “என்னங்க?” “என்னவா?
கீரையில் ஒரே மண்ணு”. நன்னா ”அலம்பினேனே?” “அலம்பினியா? இந்தா இத சாப்பிட்டு
பாரு.”
“ஏங்க
எனக்கு ஒன்னும் தெரியலயே?” “அப்படியா? இந்தா,
இந்த கீரை மொத்தத்தையும் நீதான் இன்னிக்கு சாப்பிடனும்.” அம்மா, ”வேண்டாண்டா அதுதான் நன்னாயில்லையே,
அவள சாப்பிட சொல்லி ஏன் கட்டாயப்படுத்தறே?” என்று சொல்லியும் கேட்காமல் அவளையே
சாப்பிட வைத்தேன். அது முதல் நான் ஒரு மூர்க்கனாகவே பார்க்கப்பட்டேன். மாமனார்
வீட்டிலும் ”நல்லவர்
ஆனா ரொம்ப கோபக்காரர்”, என்ற
பெயர் நிலைத்துவிட்ட்து. இது ஒருவகையில் எனக்கும் சௌகரியமாகவே போயிற்று. அவள்
வீட்டிலிருந்து யாரும் வருவதேயில்லை.
சப்வே தாண்டி ஜி.எஸ்.டி ரோடில் திரும்பினேன். யாருமில்லாமல்
தனியாக நான் மட்டுமே வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மாதிரி இருந்த்து. பழைய ஃபியட். ஏஸி
இல்லாத்தால் வியர்த்தது. இன்னும் எத்தனை கிலோமீட்டர்? க்ரோம்பேட்டையைத் தாண்டி
போய்க்கொண்டிருக்கிறேன். பல்லாவரம் அப்புறம் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம்,
தேனாம்பேட்டை, ஜெமினி, தேவி த்யேட்டர் ஐயோ இன்னும் எத்தனை தூரம்?
10 வருடங்கள் கழித்து அந்த நாளும் வந்தது.
தருமா கர்ப்பமானாள் அதுவரைக்கும் என் சுடு சொற்களிலிருந்து அம்மாதான் அவளை
காப்பாற்றி வந்தாள். ”மாப்பிள்ளை,
தருமா மாசமாயிருக்கா. டெலிவரிக்கு அவளை நாங்க கூட்டிட்டுப் போறதுதான் முறை.....” “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானும் எங்க
அம்மாவுமே பாத்துக்கறோம். அங்கே அவ்வளவு சுத்தம் போறாது.” ஒன்றும் பேசாமல் என் மாமனாரும்
மாமியாரும் கிளம்பி போனார்கள். அம்மா என் முடிவை ஆதரிக்கவில்லை. ஆனால் என் வாய்க்கு
பயந்து அவளும் ஒன்றும் பேசவில்லை. மகேஷ் பிறந்தான். “உங்கப்பா அம்மா வந்து
பாக்கட்டும் ஆனா இங்கயே இருந்து உனக்கு அத பன்னனும் இத பன்னனும்னு ஒரவாட வேண்டாம்”. ”எப்படீங்க முடியும்? அவங்களுக்கு நான்
ஒரே பொண்ணு. ஏதாவது பன்னனும்னு ஆசபடமாட்டாங்களா?” பளீர் என்று ஒரு அறை. பொறி கலங்கியது.
பச்சையுடம்புக்காரி என்றும் பார்க்கவில்லை. “ஒன்னு தெரிஞ்சுக்கோ. இந்த வீட்ல நா
மட்டுந்தான் பேசுவேன். எதிர்த்து பேசினா எனக்குப் பிடிக்காது.” அது முதல் தருமா தனக்கு என்ன வேண்டும் எது
வேண்டும் என்று கேட்பதையே தவிர்த்துவிட்டாள்.
பல்லாவரம் வந்துவிட்டேன். சே! என்னடா இது? தனியாக, யாருமில்லாமல் இந்த
வயதில் வண்டியை ஓட்டிக்கொண்டு, யாருக்காக ஆபிச்சுவரி தருவதற்காக
போய்க்கொண்டிருக்கிறேன்? திரும்பிவிடலாமா? மணி 9:45. இன்னும் அரை மணியில் அங்கே
இருந்துவிட்டால் பரவாயில்லை. மனதின் வேகத்திற்க்கு வண்டியின் வேகம் இணையாக
இருக்கவில்லை.
”அப்பா எனக்கு இஞ்ஜிணியரிங்
சேரவேண்டாம்பா. அம்மா சொல்லுமா”. “வேண்டாம் மகேஷ். அப்பா எப்படி சொல்றாரோ அப்படியே கேட்டுடு. எதிர்த்து
பேசினா அவருக்குப் பிடிக்காது. மகேஷ் என் முகத்தையே பார்த்தான். “இங்க பார்.
இன்னிக்கு இஞ்ஜிணியரிங் படிச்சாத்தான் நல்லது. இங்கே ஒன்னும் ஃப்யூச்சர் கிடையாது.
அமெரிக்கா போயிடு. “வேண்டாம்பா. எனக்கு பூனே ஃபிலிம் இன்ஸ்டிட்ல சேர்ந்து
ஃபோட்டோக்ராபி படிக்கனும்பா. ப்ளீஸ்பா.” ”சே! எப்படிடா இப்படியெல்லாம் உனக்குத்
தோணறது.? ஃபோட்டோக்ராபிப் படிச்சுட்டு? சினிமால சேரப்போறியா. உன் புத்தி
கெட்டுபோச்சா? போ! ஒழுங்கா இஞ்சிணியரிங்க் சேர்ற வழியப் பாரு.” மகேஷ் படித்தான். வேலைக்குப் போனான்.
அமெரிக்காவும் போனான். திருமணமாகும் வரை மாதத்தில் ஒரு முறயாவது பேசுபவன் அதற்கு
பிறகு எப்பொழுதாவது பேசுவான். இங்கு வரும்போது கூட பெங்களூருவிலிருக்கும் அவன்
மாமனார் வீட்டிலிறங்கி, ஒரு சனிக்கிழமை காலையில் வந்துவிட்டு ஞாயிறு மாலை
கிளம்பிவிடுவான். அவன் மனைவி குழந்தையை அழைத்து வருவதைத் தவிர்த்தான். அப்படி ஒரு
தரம் வந்த பொழுதுதான் அவன் தருமாவிடம் பேசிக்கொண்டிருந்த்தைக் கேட்டேன். ”அம்மா உன்ன வேணும்னா கூட்டிட்டுப்
போறேன். அவருக்கும் எனக்கும் ஒத்து வராது.”
ஏர்போர்ட் ஃப்ளைஒவர் மீது ஏறினேன். அடுத்து
கத்திபாரா. இன்னும் எத்தனை நேரம் பிடிக்கும் ஹிந்து ஆபீஸ் போய் சேர?
”என்னங்க. எனக்கு கார்த்தாலேர்ந்து
என்னமோ மயக்கமா இருக்கு. டாக்டர்
கிட்ட கூட்டிட்டு போறேளா?” 15 வருடங்களுக்கு முன் ஒரு காலை பொழுதில் கேட்டாள். சாயங்காலமா
போலாம். போனோம். ”டெஸ்ட்
எல்லாம் எடுக்கணும் காலைல வாங்க. வெறும் வயத்துல வரணும். தண்ணிக்கூட சாப்பிட கூடாது. ப்ளட் டெஸ்ட், யூரின்
டெஸ்ட் எல்லாம் பன்ணணும்”. செய்தோம்.
சர்க்கரை நோய் என்பது உறுதி செய்யப்பட்ட்து. ”தபாரு உனக்கு டயபடீஸ் இருக்குங்கறதால
என் சோத்துல மண்ணள்ளிப் போட்டுடாதே. நீ என்ன வேணும்னா சமைச்சுக்கோ. எனக்கு
எப்பவும் போல எல்லாம் சாதாரணமா இருக்கணும்.” சரியென்று தலையசைத்தாள். இரண்டு
சமையல் செய்யவெல்லாம் நேரமில்லாமல், உடம்பும் ஈடு கொடுக்காமல் 12 வருடங்களாக ஒரே
மாதிரியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் என்பது மூன்று வருடங்களுக்கு முன் 2
கிட்ணியும் செயல்லிழந்ததாக டாக்டர்கள் சொன்னபோதுதான் தெரிய வந்தது. மகேஷ் உடனே
வந்தான். “நீ கொஞ்ம் கேர் எடுத்துண்டிருக்கலாம்பா.” நா என்னடா செய்யறது? இவ இப்படி பத்தியமா
சாப்பிடமா உடம்பக் கெடுத்துப்பான்னு கணவு கண்டேனா?” மகேஷ் என்னை பூச்சி போல பார்த்தான்.
நிறைய பணம் செலவாகுமென்று செக் எழுத போனவனை தடுத்தேன். “வேண்டாண்டா. நா ரிடயர்ட்
கவர்மெண்ட் சர்வண்ட். எனக்கு ரியெம்பர்ஸ்மெண்ட் கிடைக்கும். டோண்ட் பாதர்.” மருமகளும் என்னை கேவலமாகப்
பார்த்தாள். எனக்கு யார் தயவும் தேவையில்லை.
அண்ணா போஸ்ட் ஆபிஸ் வந்துவிட்டது. நேரே போய் இடதுபுறம்
உள்ள கேட்டில் நுழைந்தேன். 10:20. சார் ”இங்கே பார்க் பண்ணுங்க.” ஆபிச்சுவரி?” “நேரா போய் ரைட்ல ஒரு லைட் எரியுது
பாருங்க. அங்கே உள்ளே போனா டைம் ஆபீஸ். அங்கேதான் குடுக்கணும்.” நேராக போய் வலது புறம் திரும்பினேன்.
“வாங்க. உக்காருங்க”, அவஸ்த்தையாக
இருந்தது. என்னமோ கல்யாண வீட்டில் அழைப்பது போல அழைக்கிறான்? மையமாக பார்த்தேன்.
கவுண்ட்டரின் அந்தப்புறம் இருவர் இருந்தனர். ஒருவன் வேகவேகமாக ஒரு ரிஜிஸ்ட்டரில்
ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். இந்தப்பக்கம் 3 பேர் காத்திருந்தனர். “சார் குடுங்க
சார்”.
நான்
எழுதிக்கொண்டு போயிருந்ததைக் குடுத்தேன். “8 செண்டிமீட்டர்னா பதினொராயிரத்தி
நானூரு ரூபா ஆகும் சார்” ஃபோட்டோ
இருக்கா. சரி”. பின்னாடி
இருந்தவன் “சாருது டைரெக்ட்னு போடுப்பா. இதெல்லாம் ஏஜன்சி.” என்னுடையதை எடுத்துக்கொண்டு ஒருவன்
போனான். “சார் வைய்ட் பண்ணுங்க. ப்ரூஃப் பாத்துட்டு பே பண்ணிக்கலாம்” வேர்த்தது. சாய்ந்து உட்கார்ந்தேன். “இது எங்க நம்பர் சார்”, நானும் குறித்துக் கொண்டேன் இனிமேல் இது தேவையா
என்று யோசிக்காமல்.
நேரம் 10:40. எப்போது ப்ரூஃப் ரெடியாகுமோ? ‘ஃப்ரீஸ்ர்
பாக்ஸ்’ ஆர்டர் செய்திருக்கலாமோ? மெலிதாக நெடியெதுவும் பரவுமா? “சார் தருமாங்கறது
யாரு சார்”, என்று கூவியபடி ஒருவன் வந்தான். “என்னோடதுதான்”, எழுந்து நிற்க முயற்சித்தேன். அவனே
அருகில் வந்து, “உக்காருங்க சார். இந்தாங்க ப்ரூஃப்”, என்றான். வாங்கினேன், “குடுக்கறவங்க
பேரு.......”, என்று இழுத்தேன்.
“கீழே இருக்கு சார்”. தர்மாம்பாள்
வயது....டிக் செய்தேன். அவனிடம் திருப்பிக்கொடுத்தபடி, “இந்த பேர் இன்னும் கொஞ்சம்
பெரிசா வர மாதிரி செஞ்சுடுங்களேன்”, என்றேன் என்
பெயரைக் காட்டி. அவன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தபடி, “சரி சார்”, என்று போனான்.
நான் இறந்து போனால் மகேஷ் ஆபிச்சுவரி
குடுப்பானா? இதை யார்ப் பார்க்கப் போகிறார்கள்?